ராமேசுவரம், மதுரையில் இருந்து பாலக்காடு இடையே ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
திண்டுக்கல்,
ராமேசுவரம் மற்றும் மதுரையில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்பட்டு பின்பு ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் மீண்டும் எப்போது இயக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ரெயில்கள் ரத்து
ராமேசுவரத்தில்...
more... இருந்து பாலக்காடு வரை இருந்த மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்தது. இதையொட்டி, அந்த தடத்தில் இயக்கப்பட்ட ராமேசுவரம்–பாலக்காடு ரெயில், மதுரை– பாலக்காடு ரெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
பின்பு, முதலில் மதுரை– திண்டுக்கல், மதுரை–ராமேசுவரம் இடையே போடப்பட்டு இருந்த மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, திண்டுக்கல்–பழனி, பழனி–பொள்ளாச்சி, பொள்ளாச்சி– பாலக்காடு இடையே பணிகள் நடந்தன. பின்பு ராமமேசுவரம்– மதுரை, மதுரை– திண்டுக்கல், திண்டுக்கல்– பழனி இடையே அடுத்தடுத்து ரெயில் சேவை தொடங்கியது. பின்பு பழனி வரை இயக்கப்பட்ட ரெயில்கள் பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்பட்டன.
மீண்டும் இயக்கப்படுமா?
இதற்கிடையே பொள்ளாச்சி– பாலக்காடு இடையேயான பணிகள் முடிந்து நீண்ட நாட்களாக ரெயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் திருச்செந்தூர்– பழனி– பொள்ளாச்சி செல்லும் ரெயிலை பாலக்காடு வரை நீட்டித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது. அதன்படி அந்த ரெயில் பாலக்காடு வரை சென்று வருகிறது. அந்த ரெயில் வருகிற 30–ந்தேதி வரை பாலக்காடுக்கு தற்காலிகமாக இயக்கப்படும் என முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அகல ரெயில்பாதை பணிக்காக ரத்து செய்யப்பட்ட ராமேசுவரம்– பாலக்காடு ரெயில், மதுரை–பாலக்காடு ரெயில் ஆகியைவை மீண்டும் இயக்கப்படுமா? என்பது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. பணிகள் முடிந்து மீண்டும் ராமேசுவரம்– பாலக்காடு பாதையில் ரெயில் சேவை தொடங்கி உள்ள நிலையில், ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது.
விரைவில்...
இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘முதற்கட்டமாக திருச்செந்தூர் ரெயில் பாலக்காடு வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் விரைவில் மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.